காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மேலும், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி
அரசியல் சாசனப்பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவுரை வழங்கியுள்ளது.
அதில், பிரதமரின் சிறப்பு கல்வி உதவித் திட்டத்திற்கு பொறுப்பாளர்களாக கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் காஷ்மீர் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த உதவித்தொகை பெறும் காஷ்மீர் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக உதவித்தொகை திட்ட பொறுப்பாளர்களை அணுகலாம் என அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஏற்கெனவே உள்ள 0120-244-6701 என்ற தொலைப்பேசி எண்ணிலும் மாணவர்கள் தங்கள் பிரச்சனையைக் கூறி உதவி கோர முடிவும். அல்லது jkadmissions2019@aicte-india.org என்னும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் எனவும் ஏஐசிடிஇ கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications












